எழுத்தாளர் ஞாநி உடல் தானம் - குடும்பத்தினருக்கு நன்றி சொன்ன விஜயபாஸ்கர்
மறைந்த எழுத்தாளர் ஞாநி சங்கரன் உடல் சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்தார்.
சென்னை: மறைந்த எழுத்தாளர் ஞாநி சங்கரன் உடல் சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக அளிக்கப்பட்டதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஞாநி குடும்பத்தினரை நேரில் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், உடல் தானம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
எழுத்தாளர் ஞாநி சங்கரன், உடல் நலக்குறைவால் கடந்த 15ஆம் தேதி அதிகாலையில் காலமானார். 63 வயதான ஞாநி, சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்தார். திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.
தன் உடலை மருத்துவமனைக்குத் தானமாக வழங்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. அவரின் விருப்பப்படியே உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஞாநி குடும்பத்தினரை நேரில் சந்தித்த அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஞாநி, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். பின்னர், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.