நாற்காலி சண்டை... ஈபிஎஸ் முன்னிலையில் அமைச்சர், துணைசபாநாயகர் கடும் சண்டை
எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் நாற்காலிக்காக அடித்துக்கொண்டனர்
திருப்பூர்: முதல்வருக்கு அடுத்து யார் அமர்வது என்பதற்காக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் சண்டை போட்டுக்கொண்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா திருப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மேடையில் வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
விழா மேடையில் முதல்வரும் சபாநாயகரும் அருகருகே அமர்ந்திருக்க, சபாநாயகரின் அருகில் சென்று அமர முற்பட்டார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். அப்போது கோபத்துடன் வந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகரை பின்னால் போய் உட்காருமாறு சொன்னார்.
வாக்குவாதம்
பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வந்ததே கோபம், நாற்காலியை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியின் அருகே யார் உட்காருவது என்பதில் உடுமலை ராதா கிருஷ்ணனுக்கும் , சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாற்காலி சண்டை
முதல்வரின் அருகே அமருவதோடு நம்பர் 2 யார் என்பதை நிரூபிப்பதற்காகவே இந்த சண்டை நிகழ்ந்தது. முதல்வர் அருகே இருந்த ஒரு நாற்காலியை இருவரும் பிடித்து இழுத்து சண்டை போட்டனர். இதனை மேடையின் கீழ் இருந்த பலரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
திகைத்த முதல்வர்
இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்தனர். இந்த சண்டையை பார்த்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி செய்வதறியாமல் திகைத்து நின்றார். ஒருவழியாக சுதாரித்துக்கொண்ட முதல்வர் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.
அமைச்சர்கள் சமாதானம்
அமைச்சர்கள் தங்கமணியும், செங்கோட்டையனும் சேர்ந்து உடுமலை ராதாகிருஷ்ணனை இழுத்து அமர வைத்தார்கள். எஸ்.பி வேலுமணியும், தனியரசுவும் பொள்ளாச்சி ஜெயராமனை அமைதிப்படுத்தினர். ஒரு வழியாக உடுமலை ராதாகிருஷ்ணன் முதல்வர் அருகே அமர்ந்தார். இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன் மேடை ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
பொதுமக்கள் அதிர்ச்சி
பொதுமக்கள் முன்னிலையில் ஒரு நாற்காலிக்காக இவர்கள் இருவரும் அடித்துக் கொண்டது தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா என பேசிக்கொண்டனர்.
புறக்கணித்த ராதாகிருஷ்ணன்
விழாவில் உடுமலை ராதாகிருஷ்ணன், கட்சியின் முக்கிய தலைவர்களின் பெயர்களை எல்லாம் வரிசையாக வாசித்தார். பொள்ளாச்சி ஜெயராமனின் பெயரை மட்டும் வாசிக்காமல் புறக்கணித்து அடுத்தவர்களின் பெயர்களை வாசித்தார். இதுவும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை கடுப்பில் ஆழ்த்தியது. விழாவில் கோபத்துடனேயே காட்சியளித்தார்.