அவன் என் பேரன் மாதிரி.. சின்னபிள்ளையா இருந்தான்.. அதான் கூப்பிட்டேன்.. அமைச்சர் சீனிவாசன் விளக்கம்
சிறுவனை பேரனாக நினைத்து கூப்பிட்டதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: "அந்த 2 பேரில் ஒருத்தன் என் பேரன் மாதிரியே... சின்னப்பிள்ளையா இருந்தான்.. அதனாலதான் கூப்பிட்டு செருப்பு பக்கிளை கழற்றிவிட சொன்னேன். அவ்வளவுதான்... இதுல எந்த உள்நோக்கமும் இல்லை... என்னைப்பற்றி தவறாக வரும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து கொள்கிறேன்" என்று பழங்குடி சிறுவனை செருப்பு கழட்டிவிட சொன்ன விவகாரம் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்து, வருத்தம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், கோயில் வளர்ப்பு யானைகளுக்கு இன்று முதல் புத்துணர்வு முகாம் தொடங்க இருக்கிறது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு, அமைச்சர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.. வரும் வழியில் அவரது செருப்பு புல்வெளியில் சிக்கிக் கொண்டது. பெல்ட் போட்ட செருப்பினை அமைச்சர் அணிந்திருந்தார். அப்போது தனது செருப்பின் பக்கிளை கழற்றிவிடுமாறு அங்கு விளையாடி கொண்டிருந்த ஒரு பழங்குடியின சிறுவனை கூப்பிட்டு சொன்னார். "வாடா.. வாடா.. இந்த பக்கிளை கழற்றிவிடுடா" என்று அமைச்சர் சொன்னதும், அந்த சிறுவனும், செருப்பின் பெல்ட்டை மட்டும் கழற்றிவிட்டான்.
இதற்கு பிறகு சீனிவாசனின் உதவியாளர் கீழே குனிந்து அந்த செருப்பை முழுசுமாக கழற்றிவிட்டார். இந்த சம்பவத்தை யாரோ வீடியோவும் எடுத்துவிட்டனர். சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னதால் பழங்குடியின மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர்.. சுற்றியிருந்தவர்களுக்கும் இது அதிர்ச்சியை தந்தது. சிறுவன் செருப்பை கழட்டும் வீடியோவும் வெளியாகி பரபரப்பாகிவிட்டது.
ஆனால் அடுத்த சில மணி நேரத்திலேயே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இது குறித்து மீடியாக்களுக்கு விளக்கம் அளித்தார். அதில், "முதுமலையில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் நீலகிரியில் தொடங்கியது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.. இந்த முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு சத்துணவு அளிப்பதற்காக, நானும், மாவட்ட கலெக்டர், அரசு செயலர்கள், வனத்துறை அதிகாரிகள் என 100 பேர் வந்தோம்.
"இங்க வாடா.. இதை கழட்டி விடு" பழங்குடியின சிறுவனிடம் தன் செருப்பை கழற்ற சொன்ன திண்டுக்கல் சீனிவாசன்
யானைகளுக்கு சாப்பாடு தர சென்றபோது, அங்கே ஒரு வினாயகர் கோயில் இருந்தது.. கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட வேண்டும் என்பதால், ஷூவின் மேலுள்ள பக்கிளை கழற்ற வேண்டியது இருந்தது. அதனால் சுற்றி பார்த்தேன்.. ஆனால் என்னை சுற்றி இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் எல்லோருமே வயசானவங்களா இருந்தாங்க.. ஆனால் அங்கே 2 சிறுவர்கள் விளையாடிட்டு இருந்தாங்க.
அதில் ஒருவர் பார்க்க என் பேரனை போலவே சின்னபிள்ளையாக இருந்தார்.. அதனால் அவரை கூப்பிட்டு செருப்பு பக்கிளை கழற்றிவிடுமாறு சொன்னேன். அவ்வளவுதான்... இதுல எந்த உள்நோக்கமும் இல்லை... அவரை என் பேரனாக நினைத்துத்தான் கழற்றிவிட சொன்னேன். என்னை பற்றி தவறாக வரும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து கொள்கிறேன். அது அவர்களது கண்ணோட்டம்.. எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை" என்று வருத்தம் தெரிவித்து விளக்கமும் அளித்தார்.