விவசாயமே அழிந்தாலும் பரவாயில்லை.. நான் சொல்வதை கேளுங்க.. திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு ஐடியா
வேதாரண்யம்: கஜா புயல் பாதித்த இடங்களில் விமானங்கள் மூலம் மின்கம்பங்களை நடுங்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கம் போல் சர்ச்சைக்குரிய பேச்சை பேசியுள்ளார்.
கடந்த வாரம் கஜா புயல் நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதைத் தொடர்ந்து நாகை, திருவாரூர், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. வேதாரண்யம், நாகை ஆகிய பகுதிகளில் ஒரு ஊருக்கு எப்படி மின் இணைப்பு புதிதாக கொடுக்கப்படுமோ அந்த நிலை இருந்தது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மின்கம்பங்கள் நடும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.
அமைச்சர்கள் ஆய்வு
புயலால் முற்றிலும் உருக்குலைந்து போன நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் விநியோகிப்பதற்காக மின் கம்பங்கள் நடும் பணி நேற்று நடைபெற்றது. இப்பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
விமானம்
அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். உடனே அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நடுக்கடலில் பாலம்
அப்போது உடனிருந்த ஓ.எஸ்.மணியன், அது சாத்தியமில்லை. அவ்வாறு செய்தால் விவசாயம் அழிந்து விடும் என்றார். இதைத் தொடர்ந்து மீண்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் ‘வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான்.
கண்டுபிடிக்க வேண்டும்
கடலுக்கு அடியில் நகரத்தையே நிர்மாணிக்கிறான். நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா? என்ன என்று கேட்டார். இப்படி செய்தால் விவசாயம் அழிந்து விடும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவிக்கிறார். விவசாயம் அழிந்தாலும் பரவாயில்லை. மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான கண்டுபிடிப்புகளை மின்வாரிய அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.