நாக்கு அழுகி விடும் என கூறுவதற்கு பதில் நாக்கை அறுப்பேன் என கூறிவிட்டேன்- அமைச்சர் துரைக்கண்ணு
Recommended Video
சென்னை: நாக்கை அறுப்பேன் என வாய் தவறி கூறிவிட்டேன் என்று அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு திமுக- காங்கிரஸ் கட்சிகளே காரணம் என அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. தேனி, புதுக்கோட்டை, தஞ்சை என மாவட்ட தலைநகரங்களில் அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது.
அறுத்துவிடுவோம்
அப்போது வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறுகையில் யாரைப்பார்த்து லஞ்ச ஆட்சி என்கிறாய், குற்ற ஆட்சி என்கிறாய், தவறாய் பேசுகிறாய். தப்பாய் பேசினால் நாக்கை அறுத்துவிடுவோம். ஜாக்கிரதையாக இருங்கள்.
முதல்வர்
இது உத்தமர் ஆட்சி. ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா என்னென்ன செய்ய வேண்டும் என எண்ணினார்களோ அதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் செய்து வருகின்றனர் என்று அமைச்சர் துரைக்கண்ணு பேசினார்.
துரைக்கண்ணு
இதற்கு கண்டனங்கள் எழுந்தன. தானும் அதிமுக அரசை விமர்சனம் செய்துச பேசியுள்ளேன், தனது நாக்கையும் அறுப்பார்களா என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருந்தார். அதுபோல் பாமக நிறுவனர் ராமதாஸும் 7 கோடி பேரின் நாக்கை அறுக்கும் துணிவும் தெம்பும் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு இருக்கிறதா என்று கேட்டிருந்தார்.
விளக்கம்
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்பட்டது. இதுகுறித்து அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் நாக்கை அறுப்பேன் என வாய் தவறி வந்துவிட்டது.
நாக்கை அறுப்பேன்
யாரையும் குறிப்பிட்டு அந்த வார்த்தையை கூறவில்லை. அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நாக்கு அழுகிவிடும் என கூறவந்தேன் ஆனால் வாய் தவறி நாக்கை அறுப்பேன் என்று கூறிவிட்டேன் என அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்தார்.