கிருஷ்ணகிரி: வெள்ளத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உடனடி நிவாரண நிதி
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவனின் பெற்றோரிடம் ரூ.4 லட்சம் நிவாரண உதவியை உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் வழங்கினார்.
கனமழையில் மின்சாரம் தாக்கியும், வெள்ளத்தில் சிக்கியும் உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரண நிதிகளை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் அமைச்சர்கள் நிவாரண நிதிகளை வழங்கி வருகின்றனர்.
லக்கம்பட்டி தென்பெண்ணை ஆற்றில் குளித்த விஜயரங்கன் மகன் திருமலை,10 ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். சிறுவனின் உடல் செவ்வாய்க்கிழமை நாரியம்பட்டி தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் கரையில் ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சிறுவனின் சடலத்தை மீட்டனர். ஊத்தங்கரை அரசு மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் சிறுவனின் பெற்றோரிடம் ரூ.4 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் ராஜேஷ், ஊத்தங்கரை சட்டபேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, மாவட்டச் செயலர் கோவிந்தராஜ், ஒன்றியச் செயலர் தேவேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
கடந்த காலங்களில் மழைக்காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத்தொகை காலதாமதமாக அறிவிக்கப்பட்டு வழங்கப்படும். இப்போதோ தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்கங்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.