அரசு பேருந்தை அழகுபடுத்திய ஊழியர்கள்... அள்ளிய கலெக்சன்...: சிறப்பு பரிசு கொடுத்த அமைச்சர்
திருப்பூர்: தமிழக போக்குவரத்து கழகத்தில் உள்ள ஒரு அரசு பேருந்தை தனியார் பேருந்துக்கு நிகராக அழகுபடுத்திய ஓட்டுனர், நடத்துனர் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு சிறப்பு பரிசு வழங்கியுள்ளது. அழகான பேருந்தில் பயணிக்க பயணிகள் ஆர்வம் காட்டியதால் அந்த பேருந்தில் வசூல் கூடுதலானது.
தனியார் பேருந்துகளில் பயணிக்கவே இன்றைக்கு பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் இருக்கை வசதி, சொகுசான பயணத்திற்காகவே கட்டணம் கூடுதல் என்றாலும் பலரும் தனியார் பேருந்துகளை நாடுகின்றனர். தேவகோட்டையில் இருந்து திருப்பூர் இயக்கப்படும் ஒரு அரசு பேருந்தில் பயணிக்கவே பலரும் ஆர்வம் காட்டுகின்றனராம். காரணம் அதன் பராமரிப்புதான்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்து ஒன்றில் எல்.இ.டி டிவி, 6 டிராக் மியூசிக் சிஸ்டம் மற்றும் கண்ணை கவரும் ஒளி விளக்குகளால் அலங்காரம் செய்த அந்த பேருந்தை இயக்கி வரும் முருகேசன்,ரங்கராஜ், கண்ணன், பாரதிதாசன் மற்றும் உயர் அதிகாரி ஒரு வருக்கு சிறப்பு பரிசு வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருந்து, காலை, 8 மணிக்கு புறப்படும், அரசு பேருந்து புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வழியாக மாலை, 5 மணிக்கு திருப்பூர் வந்தடைகிறது. இந்த பேருந்தின் ஓட்டுனர் முருகேசன் தான் ஓட்டும் பேருந்து ஒன்றை தினமும் கழுவி, அதில் டிவி, மியூசிக் சிஸ்டம் பொருத்திக்கொள்ள காரைக்குடி மண்டல பொது மேலாளரிடம் அனுமதிகேட்டனர். இதற்கு பொது மேலாளர் சம்மதம் சொன்னதும், முருகேசன்,ரங்கராஜ், கண்ணன், பாரதிதாசன் ஆகியோர் இணைந்து அரசு பேருந்தை அழகு படுத்தி, தினமும் பணிக்கு செல்லும் முன் பேருந்தை கழுவினர்.
பஸ்சில், இரண்டு, 'எல்.இ.டி டிவி' 5.1, எம்.பி., டிவிடி எட்டு இடங்களில், ஸ்டீரியோ, வூபர் பொருத்தப்பட்டு, சினிமா திரையிடப்படுகிறது. இதற்காக, 10, பென் டிரைவ்கள் வைக்கப்பட்டு உள்ளன. பயணிகளுக்கு தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் பயணிகளுக்கு ஏற்படுகிறது.
பேருந்தின் முன் கண்ணாடியில், புறப்படும் நேரம், சென்றடையும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. பஸ் சக்கரங்களில், 'கிளாசிகல் வீல் கப்' நான்கு புறமும், அலங்கார வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. பஸ் புறப்படுகையில், விளக்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்து, பயணிகளை திரும்பி பார்க்க வைக்கிறது. அரசு பேருந்து தானே என்று அலட்சியம் காட்டாமல், அக்கறையோடு பராமரித்து வருகின்றனர்.
பேருந்தின் பல வசதிகள் மற்றும் அழகை கண்டு அந்த பேருந்தில் வசூல் அள்ளியது. இதனால் உயர் அதிகாரியும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த விஷயத்தை கேள்விபட்ட போக்குவரத்துதுறை அமைச்சர் பேருந்தை அழகுபடுத்திய ஊழியர்கள் முருகேசன் - தேவகோட்டை, ரங்கராஜ் - மணப்பாறை, கண்ணன் - தேவகோட்டை,-
பாரதிதாசன் - சிவகங்கை, இதற்கு அனுமதி அளித்த உயர் அதிகாரி ஆகியோருக்கு தலா ரு. 5000 சிறப்பு பரிசாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மற்ற ஊழியர்களுக்கும் தூண்டுகோளாக இருக்கும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல அனைத்து பேருந்துகளையும் பராமரித்தால், போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்தை எட்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.