டிடிவி தினகரனுக்கு ரூ. 10 ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்ந்தது எப்படி- ஜெயக்குமார்
டிடிவி தினகரன் ரூ.10,000 கோடி அளவுக்கு சொத்து சேர்த்தது எப்படி என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தலைமை செயலகத்திற்கு வந்து அரசு மீது புழுதி வாரி தூற்றுவதா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். ஊழல் புகார் கூறும் டிடிவி தினகரனுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்ந்தது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும் என கூறினார்.
அப்போது அவரிடம் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும், டிடிவி தினகரன் பேட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், எதற்கெடுத்தாலும் கேமரா முன்னாடி நிற்பதே டிடிவி தினகரனுக்கு பேஷனாகி விட்டது என்றாகிவிட்டது.
ஊழல் புகார் சொல்பவர்கள், நேரடியாக வந்து சொல்ல வேண்டியதுதானே? வெற்றிவேல், தங்க தமிழ்செல்வனை மாட்டி விடுவதா? யாரையாவது மாட்டி விடுவதே டிடிவி தினகரனுக்கு வேலையாகிவிட்டது.
தலைமை செயலகம் என்பது இதயம் போன்ற பகுதி. மக்கள் தங்களின் குறைகளை சுமந்து கொண்டு அங்கு வருவார்கள். அங்கு வந்து அரசு மீது புழுதுவாரி தூற்றுவதா? இவ்வளவு பேசும் தினகரனுக்கு ரூ. 10 ஆயிரம் கோடிக்கு சொத்து வந்தது எப்படி என்று சொல்ல முடியுமா? என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.