டி.என்.பி.எஸ்.சி. தேர்வு ஊழல்... திமுகவை உள்ளுக்குள் இழுக்கும் அமைச்சர்
சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பணி நியமனங்கள் பற்றி சிபிஐ விசாரணை தேவை என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த தேர்வு முறைகேடுகள் பற்றிய பல தகவல்கள் வெளியே வரும் என்றும், அதில் தொடர்புடைய பலரும் விரைவில் சிறைக்கு செல்வார்கள் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது அதிமுக அரசாங்கத்தில் நடைபெற்ற போஸ்டிங்ஸ் பற்றி திமுக சிபிஐ விசாரணை கோரியுள்ளதால், அதற்கு கடிவாளம் போடும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் இதை கூறியுள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருந்துகொண்டு எங்களை குறை கூற திமுகவுக்கு என்ன தகுதி என்றெல்லாம் கூட ஆவேசம் காட்டியுள்ளார்.
வழக்கமாக அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை செய்தியாளர்கள் சந்திப்பில் கூலாக, சிரித்தவாரே நகைச்சுவை ததும்ப பல விவகாரங்களை பேசுவார். ஆனால், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பணி நியமனம் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்கும் அளவுக்கு திமுக சென்றுவிட்டதால் இன்று சற்று கொதிப்பாகவே திமுக மீது பாய்ந்தார். திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தை இந்த விவகாரத்தில் இழுத்துவிடும் வகையில், அவர்கள் எழுதிய கடிதங்கள் கைப்பற்றப்பட்டு அது குறித்த வழக்கு உள்ளதாக தெரிவித்தார்.
அதாவது இனியும் தேர்வு முறைகேடு தொடர்பாக அரசை சீண்டினால் பழைய விவகாரங்கள் கிளறப்படும் என்பதை சிம்பாலிக்காக கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். ஏற்கனவே திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவுக்கும் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய இடைதரகர் ஐயப்பனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி பரபரப்பை பற்ற வைத்திருந்தார் அமைச்சர் ஜெயக்குமார். இப்போது, திமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரை இந்த விவகாரத்தில் இழுத்து விடும் வகையில் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத் தேர்வுகளில் இனி எந்தக் காலத்திலும் முறைகேடு செய்ய முடியாத வகையில் கடுமையான சில நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.