போய் வா ஷாலினி.. புதிய பிறவியில் இன்னும் பொலிவுடன் வா.. அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம்
Recommended Video
சென்னை: மாலைமுரசு டிவி செய்தியாளர் ஷாலினியின் கோர மரணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
மாலைமுரசு தொலைக்காட்சியின் நிருபர் ஷாலினி விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஒருகணம் நிலைகுலைந்து போனேன். தினமும் காலைநேரத்தில் நான் அலுவலகம் கிளம்பும் முன் எனது வீட்டருகே செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம்.
அப்படியான சந்திப்புகளின் போது, துடிப்புடனும், பொறுப்புடனும் கேள்விகளை ஏந்தி வரும் அந்த சின்னஞ்சிறு பெண் நிருபர் ஷாலினி என் கவனத்தை எப்போதும் ஈர்ப்பார். பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்து, செய்தித்துறையில் சாதித்திட பல கனவுகளை கண்டிருந்த அந்த இளம் செய்தியாளர் சாலை விபத்தில் உயிரிழந்தார், அதுவும் பிறந்தநாளில் உயிரிழந்தார் என்ற செய்தி என்னை உலுக்கி விட்டது.
ஷாலினியின் உருவம் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் உயிரோடு இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது மனம். நாளை செய்தியாளர் சந்திப்பின் போது ஒளிரும் கண்களுடனும், சிரித்த முகத்துடன், வலுவான கேள்விகளை ஏந்திவரும் ஷாலினியை எங்கே என்று தேடுவேன்.
செய்தியாளர்களே, நண்பர்களே அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், உங்கள் உயிர் விலைமதிப்பில்லாதது, சமூகத்திற்கும் உங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் பெரிய சொத்து. பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ளுங்கள். விபத்தில்லா நெடுவாழ்வு வாழுங்கள். உயிரிழந்த ஷாலினியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்.
போய் வா ஷாலினி, புதிய பிறவியில் இன்னும் பொலிவுடன் வா...
இரங்கலுடன்
D.ஜெயக்குமார், தமிழக அமைச்சர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டியில் வசிக்கும் அங்கையர்கரசி, சென்னையில் மாலை முரசு அலுவலகத்தில் பணிபுரிகிறார். அவரை பார்க்க அவரது அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்களான செய்தியாளர் ஷாலினி, ராம்குமார், சதீஸ், கோகுல், பிரபுராஜ் ஆகியோர் பள்ளபட்டி வந்து சந்தித்து விட்டு, சென்னை திரும்பியபோது, செட்டிக்குளம் என்ற இடத்தில் விபத்து நேரிட்டு ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார்.
முதல்வர் எடப்பாடி இரங்கல்- நிதியுதவி அறிவிப்பு:
இதற்கிடையே ஷாலினியின் மறைவு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மரணமடைந்த ஷாலினி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவியையும் அவர் அறிவித்துள்ளார்.