கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? ஜெயக்குமார் விமர்சனம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணியும் இணையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? என்று ஓ.பன்னீர்செல்வம் அணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
தினகரன் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஓ. பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இரு அணிகளும் இணைவதில் பல்வேறு சிக்கல் உருவாகியுள்ளதாக தெரிகிறது. பேச்சுவார்த்தைக்கு தயார் எனக் கூறிய ஓபிஎஸ் அணி சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கதிகலங்கிப் போய் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் இரு அணிகளும் இணைவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்பிக்கள் மைத்ரேயன், ராஜேந்திரன், வனரோஜா, எம்எல்ஏக்கள் செம்மலை, ஆறுகுட்டி மற்றும் பி.எச். பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்தக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, தினகரனை கட்சியில் இருந்து வெளியேற்ற சசிகலா, நடராஜன், திவாகரன் ஆகியோர் நாடகம் நடத்தியுள்ளனர் என்றும் இதற்கான பகடைக்காயாக பழனிச்சாமி அணியினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டிய கே.பி. முனுசாமி, விரைவில் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கூறினார்.
இந்நிலையில் மணிமங்களத்தில் குடிமராத்து பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓபிஎஸ் அணியில் ஒரு மாவட்ட செயலாளர்கள் கூட கிடையாது. மக்கள், கட்சியினர் விருப்பத்தின் பேரிலேயே பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தோம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? என்று விமர்சனம் செய்தார். மேலும், மடியில் கணம் இல்லை; வழியில் பயம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.