திமுக அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!
திமுக அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு, அதிமுக சார்பில் யாருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதில் திமுக அரசியல் பண்பாட்டைக் கடைபிடிக்கவில்லை என்றும் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது. "அரசியல் ஆளுமை கலைஞர்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தலைவர்கள் கருணாநிதியின் அரசியல் திறமை, ஆளுமையை பற்றி சிறப்பாக எடுத்துக் கூறினர்.
பாரத ரத்னா
கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக எல்லா தலைவர்களும் வலியுறுத்திய முக்கிய கோரிக்கை... கருணாநிதிக்கு பாரதரத்னா வழங்கப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த கூட்டத்தில் அதிமுக தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. காரணம், இந்த கூட்டம் சம்பந்தமாக அதிமுகவுக்கு திமுக அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அமைச்சர் ஜெயக்குமார்
இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை விமான நிலையத்தில் சந்தித்து பேசினார். அப்போது, கருணாநிதி அஞ்சலி கூட்டம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஜெயக்குமார், "கருணாநிதி இறந்தபோது, முதலமைச்சர் கருணாநிதி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். உடல் நல்லடக்கத்திலும் அரசு சார்பாக நான் சென்று அஞ்சலி செலுத்தினேன்.
அரசியல் பண்பாடு
இப்படி, கருணாநிதி மறைவின்போது, தமிழக அரசு உரிய மரியாதை வழங்கி அரசியல் பண்பாட்டுடன் நடந்து கொண்டது. ஆனால் திமுக அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை. அரசியல் பண்பாடு பேணி காக்கப்பட்டு, அவை கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதனை நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் திமுக கடைப்பிடிக்கவில்லை" இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
பொறுத்திருந்து பார்ப்போம்
நேற்று நடைபெற்ற அஞ்சலி கூட்டத்திற்கு அதிமுகவுக்கு ஏன் அழைக்கப்படவில்லை என்பது தெரியவில்லை. ஒருவேளை அழைப்பு விடுத்திருந்தால் அதிமுக தரப்பில் யாராவது வந்திருப்பார்களா என்றும் தெரியாது. எனினும், வரும் 30 ஆம் தேதி அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ளும் கருணாநிதியின் இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அதிமுக, திமுகவின் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்!