மாடத்திலே கன்னி மாடத்திலே.. செல்லூர் ராஜூவை வைத்து சட்டசபையில் கலகலகத்த ஜெயக்குமார், துரைமுருகன்!
சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூவை அமைச்சர் ஜெயக்குமாரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனும் கிண்டலடித்ததால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
சென்னை: சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூவை அமைச்சர் ஜெயக்குமாரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனும் கிண்டலடித்ததால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில் ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சிகள் எத்தனை விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் கூறினாலும் அவ்வப்போது அவையை அதிர வைக்கும் நகைச்சுவை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
குறிப்பா நடப்பு கூட்டத்தொடரில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவரையொருவர் போட்டி போட்டுக்கொண்டு கிண்டலடித்து வருகின்றனர். இதனால் நாள்தோறும் சிரிப்பலையும் எழுந்து வருகிறது.
சட்டசபையில் விவாதம்
இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரிலும் அப்படியான ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்று கூட்டுறவுறத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
சத்தமாக படித்த அமைச்சர்
தனது துறையின் மானியக்கோரிக்கை என்பதால் மனைவியையும் உடன் அழைத்து வந்திருந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ. கூட்டுறவுத்துறை பதில் உரையை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சட்டசபையில் படிக்கத் தொடங்கினார். அப்போது அவர் வழக்கத்தைவிட சத்தமாக படித்தார்.
வெளியில் புலி
இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், மாடத்தில் உள்ள செல்லூர் ராஜூவின் மனைவி, அவரது பேச்சை கேட்டு வீட்டில் பூனையாகவும் இங்கு புலி போல் இருப்பதாகவும் கூறினார் என்றார்.
மாடத்திலே கன்னி மாடத்திலே
உடனடியாக குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார் மாடத்தில் உள்ள அமைச்சரின் துணைவியாருக்கு அமைச்சர் செல்லூர் ராஜூவின் மேலுள்ள மரியாதையை பார்த்தால் மாடத்திலே கன்னி மாடத்திலே என பாட தோன்றுகிறது என்றார்.
மனைவியே கண்கண்ட தெய்வம்
மேலும் அமைச்சர் செல்லூர் ராஜூ உதாரண புருஷராகவும் மனைவியே கண்கண்ட தெய்வமாகவும், அனைவருக்கும் உதாரணமாகவும் உள்ளார் என்றார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பேச்சால் அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட அனைவரும் சிரித்து விட்டனர்.