ஓபிஎஸ்ஸுக்காக நிதியமைச்சர் பதவி தர மாட்டேனா.. ட்ரம்ப்பை வச்சி கலாய்த்த ஜெயக்குமார் அந்தர் பல்டி
இரட்டை இலை சின்னத்திற்காகவும், கட்சிக்காகவும் நிதி அமைச்சர் பதவியை ஒபிஎஸ்ஸுக்கு விட்டுத்தர தயாராக இருக்கிறேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக இரு பிரிவுகளும் மீண்டும் இணைய தியாகம் செய்ய தயாராக இருப்பதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கே ஓபிஎஸ்தான் காரணம் என்று கலாய்த்த ஜெயக்குமார் தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார்.
சேத்துப்பட்டு ஏரியை பார்வையிட்ட பின்னர் நிதி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நாங்கள் திறந்த மனதோடு திறந்த புத்தகமாக எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று சொல்லி கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வருவார்கள்..
நாளைக்கு திங்கள் கிழமை. நாளைக்கு அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரலாம். பேச்சுவார்த்தை நடத்தலாம். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கின்றோம். அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஒற்றுமை
123 எம்எல்ஏக்களும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனர். மக்கள் கோரிக்கைகள் ஆங்காங்கே இருக்கலாம். அது முதல்வர் கவனத்தில் கொண்டு வரப்படும் போது நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் தேவையை எடப்பாடி பழனிச்சாமி அரசு பூர்த்தி செய்து வருகிறது.
இரட்டை இலை
ஓபிஎஸ்ஸுக்கு நிதியமைச்சர் பதவி வேண்டும் என்று சொன்னால் முதல்வரின் ஒப்புதலோடு நான் என் பதவியை விட்டுத் தருகிறேன். வேறு என்ன கேட்டாலும் கட்சி நலன் கருதியும், இரட்டை இலையை பெறவும் எனது அனைத்துப் பொறுப்புக்களையும் விட்டுத் தர தயாராக உள்ளேன்.
தியாகம்
பொதுச் செயலாளர் பதவியை கேட்டாலும், அதை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்து பேசட்டும். பின்னர் பார்க்கலாம். கட்சிதான் முக்கியம். ஆட்சிதான் முக்கியம். அதற்காக நாங்கள் தியாகம் செய்வோம் என்று ஜெயக்குமார் கூறினார்.