"பச்சை கொடி காட்டுவோம்"- ராஜேந்திரபாலாஜியின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அடடே விளக்கம்
பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கத்தை அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது பச்சை என்பது விவசாயத்தை குறிப்பதற்காக என்று அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கத்தை அளித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் என நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் 12- ஆம் தேதி ராணுவ தளவாடப் பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.
தமிழகமே போராட்ட களமாக இருக்கும் நிலையில் காவிரி வாரியம் அமைக்காத நரேந்திர மோடியை கண்டித்து கருப்பு கொடி காட்டுவோம் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
கருப்பு சட்டை
பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வரும் போது அனைவரும் கருப்பு ஆடைகளை அணியவும் வீடுகளில் கருப்பு கொடி கட்டவும் எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. பிரதமர் விமானத்தில் பறந்தாலும் சாலையில் வந்தாலும் கருப்பு கொடி காட்டியே தீருவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டபோது பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், நாங்கள் அவருக்கு பச்சைக் கொடி காட்டுவோம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்தன. பச்சை கொடி காட்டுவதற்கு பதில் காவிக் கொடிகளை காட்டுங்கள் என்ற நக்கலான ஐடியாக்களும் கொடுக்கப்பட்டன.
ஜெயக்குமார் விளக்கம்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசை கண்டிப்பதாக கூறுகிறீர்கள், ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்ற கூறினால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பச்சை கொடி காட்டுவோம் என்கிறாரே என்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், இது முழுக்க முழுக்க ராஜேந்திர பாலாஜியின் சொந்த கருத்தாகும். ஆனால் அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு அதை கூறியிருப்பார் என்பதை என்னால் கூறமுடியும்.
பச்சை என்றால் விவசாயம்
தேசிய கொடியில் உள்ள பச்சை நிறம் என்பது விவசாயத்தை குறிக்கிறது. பச்சை என்பது பசுமையை குறிக்கும், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் உள்ளதால் அதை குறிக்கும். விவசாயத்தை காக்க காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதமர் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக பச்சை கொடி காட்டுவோம் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கலாம். எனவே அவர் விவசாயிகளுக்காகவே பச்சைக் கொடி காட்டுவேன் என்று கூறியிருப்பாரே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.