ஐஐடியில் சமஸ்கிருத இறைவணக்கப்பாடல்: அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததற்கு ஐ.ஐ.டி அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : சென்னை ஐ.ஐ.டி.,யில் சமஸ்கிருதத்தில் இறைவணக்கப்பாடல் பாடப்பட்டதற்கு சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.,யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சமஸ்கிருத மொழியில் இறைவணக்கம் இசைக்கப்பட்டது. பொதுவாக மத்திய அரசு நிறுவன விழாக்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுதான் மரபு.
ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஐ.ஐ.டி.,யில் தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடப்பட்டது பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் , தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததற்கு சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், ஐ.ஐ.டி விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததை இந்த அரசு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது.
எனினும், பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு இனி அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் என்றும் அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இனியும் இது போன்ற சம்பவம் நடைபெறாது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஐ.ஐ.டி உடனடியாக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதை உடனடியாக கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.