கொள்ளையடித்து, ஊரை ஏய்த்து.. மோடிக்கு ஆதரவாக விளாசி தள்ளிய ஜெயக்குமார்
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி அறிவுறுத்தலால்தான் அதிமுக இணைப்புக்கும், அமைச்சரவையில் பங்கெடுக்கவும் ஒப்புக்கொண்டதாக அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் அதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர் கூறுகையில், பிரதமர் மோடி இல்லை, வேறு யார் வேண்டுமானாலும் ஜெயலலிதா தலைமையில் இயங்கிய கட்சி உடைந்துள்ளதே என்ற ஆதங்கத்தில் அறிவுரை கூறினாலும் ஏற்கலாம். கூறும் கருத்துதான் முக்கியம்.
கொள்ளை
சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டே ஒதுக்கி வைக்க வேண்டும், அது கொள்ளையடித்து குடும்பம், ஊரை ஏய்த்த குடும்பம், கொள்ளையடித்து சொத்து சேர்த்த குடும்பம் எனவே அதை விட்டுவிட்டு உண்மை தொண்டர்களுடன் கட்சியை வழி நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் யார் கருத்து கூறினாலும் அது ஏற்கத்தக்கதே.
கருத்துதான்
நீங்கள் (நிருபர்கள்) அப்படி கூறினாலும் அதை ஏற்கலாம். கூறும் கருத்துதான் முக்கியமே தவிர, யார் கூறினார்கள் என்பது முக்கியமில்லை.
தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் நல்ல உறவை வைத்துள்ளோம்.
மாநில சுயாட்சி
அதேநேரம், அதிமுகவின் கொள்கைப்படி, மாநில சுயாட்சியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இதை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
தீவிரவாதம்
இலங்கையில் உள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அது அழிக்கப்படும். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.