மீண்டும் அதிமுக உடைகிறது? ஜெயக்குமார் தலைமையில் 17 அமைச்சர்கள் திடீர் ரகசிய ஆலோசனை!
நிதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தலைமை செயலகத்தில் அவரது அறையில் 17 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: நிதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 17 அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் திடீர் ஆலோசனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் முதல்வர் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிமுகவில் மேலும் பிளவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இரட்டை இலை சின்னத்தில் லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது இரட்டை இலை சின்னத்தை பெற அதிமுகவின் இரு அணிகளும் இணைவது என்று முடிவு செய்யப்பட்டது.
அப்போது கட்சியின் நலன் கருதி தினகரனையும், சசிகலாவையும் ஒதுக்கி வைப்பது என்று அமைச்சர் தங்கமணியின் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோர் அறிவித்தனர்.
அமைச்சர் பதவி
இதைத் தொடர்ந்து தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எதிரான நிலைப்பாட்டையே அமைச்சர்கள் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜி, தோபபு வெங்கடாசலம், தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படு்ம என்று கூவத்தூரில் உறுதி அளிக்கப்பட்டது. எனினும் தினகரனும் சிறை சென்றுவிட்டதால் அந்த 3 எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள் தனித்தனி குழுக்களாக செயல்பட்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தினகரன் ஆலோசனை
இந்நிலையில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த தினகரன் சென்னை வந்தடைந்தார். அப்போது அவரது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில் அமைச்சரவையில் மாற்றம் குறித்தும், தினகரன், சசிகலாவுக்கு எதிராக கருத்தை வெளிப்படுத்திய அமைச்சர் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, வீரமணி உள்ளிட்ட 4 பேரை பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு
பெங்களூர் பரப்பரன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் இன்று பிற்பகல் சந்திக்கவுள்ளார். அப்போது அவரிடம் கட்சியின் நிலை குறித்தும், அமைச்சரவை மாற்றம் குறித்தும், அமைச்சர்கள் ஜெயகுமார் உள்ளிட்ட 4 அமைச்சர்களை அப்பதவியிலிருந்து நீக்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் சசிகலாவுடன் தினகரன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
ஜெயகுமார் மீது விமர்சனம்
தினகரன் அதிமுகவில் தொடர்வது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், அதுகுறித்து வழிகாட்டுதல் குழுதான் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். அதேவேளையில் நமது எம்ஜிஆர் நாளிதழுக்கும், தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியது குறித்து தினகரனிடம் கேள்வி எழுப்புகையில், ஜெயகுமார் உலக மேதை என்றும், அவர் அளவுக்கு என்னால் இறங்கி பதில் சொல்ல முடியாது என்றும் கூறியிருந்தார். அதிமுகவில் தொடர்வேன் என்று தினகரன் கூறியதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்தவித பதிலையும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
திடீர் ஆலோசனை
இந்நிலையில் சசிகலாவை பார்க்க தினகரன் பெங்களூர் சென்றிருக்கும் நிலையில் தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயகுமார் அறையில் 17 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை. வரும் ஜூன் 14-ஆம் தேதி சட்டபேரவை கூடுவது குறித்து ஆலோசனை என்றாலும் அது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடாததால் அதிமுக மேலும் பிளவுபடலாம் என்று தெரிகிறது. இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் சிவி சண்முகம், ராஜலட்சுமி, செங்கோட்டையன், தங்கமணி, ஜெயகுமார், வெல்லமண்டி நடராஜன், சரோஜா, மணிகண்டன், ஓ.எஸ்.மணியன், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பெங்களூர் சென்றபோது ஆலோசனை
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக தினகரனின் பெயர் அடிப்பட்டபோது சித்தியை சந்திக்க அவர் பெங்களூர் சென்றிருந்த போதுதான் இரவோடு இரவாக அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனை நடத்தி தினகரனையும், சசிகலாவையும் ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். தற்போதும் தினகரன் பெங்களூர் சென்றிருக்கும்போது ஆலோசனை நடத்துவதால் நிச்சயம் அரசியல் தொடர்பாக ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.