ஹாசினி வழக்கில் நிச்சயம் மேல்நடவடிக்கை.. அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!
ஹாசினி கொலைக்குற்றவாளி தஷ்வந்த் மீது அரசு மேல்நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.
சென்னை : குழந்தை ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி மீது நிச்சயம் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சம்பவம் இப்போது நினைத்தாலும் நெஞ்சை பதறவைக்கிறது. 7 வயது குழந்தை ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து அதே குடியிருப்பில் வசித்த இளைஞன் கொலை செய்தான்.
ஒரு பிஞ்சுக் குழந்தையை கருக்குவதற்கு அவனுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ என்று புலம்பாதவர்களே இல்லை எனலாம். ஆனால் நேற்று முன் தினம் குற்றவாளி தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்தானதால், அவனுக்கு எளிதில் ஜாமினும் கிடைத்துவிட்டது.
7 மாதங்களில் குற்றவாளி தஷ்வந்திற்கு ஜாமின் கிடைத்துள்ளது அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், ஹாசினியை கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் மீது அரசு நிச்சயம் மேல்நடவடிக்கை எடுக்கும்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளி தஷ்வந்திற்கு அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்குப் பாடமாக அமையும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.