துப்பாக்கி சூடு.. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஜெயக்குமார்
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிறார் ஸ்டாலின் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மதுரை: திமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூடுகளில் 60 பேர் பலியாகியுள்ளனர் என்றும், ஆனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து ஸ்டாலினின் பேச்சு எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல் உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் பயங்கரவாதத்திற்கு அனுமதி இல்லை. ஒருபோதும் அதை அனுமதிக்கவும் மாட்டோம். ஸ்டெர்லைட் நிர்வாகம், மாசு கட்டுபாடு வாரியம் நோட்டிஸ்க்கு விளக்கம் அளிக்காததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரச்சினைக்காக இணைய சேவையை முடக்கப்பட்டது. வட மாநிலங்களில் உள்ள நடைமுறை தற்பொழுது இயல்பு நிலை திரும்புகிறது. இணைய வசதிகளும் செயல்படுகின்றன.
துப்பாக்கி சூடு நடத்தியது துரதிருஷ்டவசமானது. அது கவலையளிக்கிறது. வேதனையளிக்கிறது. ஆனால் அதனை நியாயப்படுத்தவில்லை. நாளை நானும் துணை முதலமைச்சரும் தூத்துக்குடி சென்று நேரிடையாக பார்வையிட உள்ளோம்.
திமுக ஆட்சிக் காலத்தில் 1970, 1974, 1989, 1991, 2006, 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற துப்பாக்கி சூடுகளில் 60 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கி சூடு குறித்து ஸ்டாலினின் பேச்சு எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. திமுக ஆட்சியில் தான் இந்த ஆலையை மூட முழு அளவில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆலையை மூட அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாது. அதனை அரசு என்றும் அனுமதிக்காது.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.