"2011-ம் ஆண்டை நினைவுகூர்கிறேன்"... கருணாநிதிக்கு அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல்!
திமுக தலைவர் கருணாநிதிக்கு அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக மீன வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 50 ஆண்டுகாலமாக ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து பொன்விழா கண்ட பெருமைக்குரியவர் கருணாநிதி என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகளின் பங்களிப்பு அளப்பரிய ஒன்று. பேரறிஞர் அண்ணாவால் துவக்கி வைக்கப்பட்ட திராவிட அரசியலில் முக்கிய தலைவராக விளங்கியவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு கலைஞர் திரு.கருணாநிதி அவர்கள். 50 ஆண்டுகாலமாக ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து பொன்விழா கண்ட பெருமைக்குரியவர்.
அரசியலைப் போன்றே திரைத்துறையில் அவர் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பதை மறுக்க முடியாது. அவரது திரைப்பட வசனங்கள் இன்றளவும் பலராலும் நினைவுகூறப்படுகிறது.
2011-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நான் தமிழக சட்டபேரவை தலைவராக இருந்தபோது திமுக தலைவர் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை இத்தருணத்தில் நினைவு கூறுகிறேன்.
உடல்நலம் குன்றி, சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனத்துயருற்றேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், அவரது தொண்டர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்", என அவர் தெரிவித்துள்ளார்.