நல்ல வேளை எம்ஜிஆருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லைன்னு சொல்லாம விட்டாரே!
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் வெளியான கருத்து அதிமுக கருத்து இல்லை என்று சொன்ன அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சு வேடிக்கை வினோதமாக அமைந்துள்ளது.
சென்னை : மோடி அரசு குறித்து நமது எம்ஜிஆரில் வெளியான கருத்து அதிமுகவின் கருத்து இல்லை என்று கூறியுள்ளார் நிதியமைச்சர் ஜெயக்குமார். நல்ல வேளையாக எம்ஜிஆருக்கும் அதிமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்லாமல் விட்டாரே என்றே மக்களுக்கு எண்ணத் தோன்றுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சொத்துக்குவிப்பு வாக்கில் தண்டனை உறுதியானதால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனும் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.
இரண்டு பட்ட அதிமுக
இரண்டு பட்ட கட்சி ஒருங்கிணைப்பு, ஒரு அமைச்சர் வீட்டில் வருமானவரி சோதனை, மற்றொரு அமைச்சர் மீது ஊழல் புகார் என்று நெருக்கடி மேல் நெருக்கடியால் முதல்வர் பழனிச்சாமி திணறிப்போனார். பின்னர் முதலில் எதிர்த்த மத்திய அரசின் முடிவுகளான நீட் தேர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட விஷயங்களுக்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசை சாந்தப்படுத்தினார்.
நல்லெண்ண நாயகன்
தொடர்ந்து டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது, மத்திய அரசை விமர்சித்து கரத்து தெரிவிக்க அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு என்று மத்திய அரசின் நல்லெண்ண நாயகனாகவே மாறிப் போனார் பழனிச்சாமி. அண்மையில் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இறைச்சிக்காக மாடுகளை விற்பனைக்கு கொண்டு செல்ல விதித்த தடை விஷயத்திலும் முதல்வர் வாய் திறக்காமல்தான் உள்ளார்.
விளாசும் கட்டுரை
இந்நிலையில் நேற்று வெளியான அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் நரேந்திர மோடி 3 ஆண்டு கால ஆட்சி குறித்து நாடு காக்கும் அரசா? மாடு காக்கும் அரசா? என்று காட்டமான கருத்து வெளியானது. தொடர்ந்து மத்திய அரசுடன் நல்லுறவில் இருந்து வரும் நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் வந்த இந்த கடும் தாக்குதல் கட்டுரை அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது. சிபிஐ சோதனை, மொழி திணிப்பு, ஆன்ட்டி இந்தியன் பழி, ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்தையும் வைத்து ஒரு விளாசு விளாசி அந்தக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
அதிமுக கருத்து இல்லை
இதையடுத்து பதறிப் போன எடப்பாடி தரப்பு இன்று அமைச்சர் ஜெயக்குமாரை விட்டு விளக்கம் அளித்தது. நமது எம்ஜிஆர் நாளேட்டில் வந்த கருத்து அதிமுகவின் கருத்து இல்லை என்று தெரிவித்துள்ளார் ஜெயக்குமார். ஜெயலலிதா முதலமைச்சராகவும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்த போதும் கட்சியில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் ஜெயா தொலைக்காட்சி மற்றும் நமது எம்ஜிஆர் நாளேட்டில் வருவதே திண்ணம் என்று கட்சியினர் நம்பி வந்தனர்.
சொல்லாமல் போனாரே
ஆனால் எங்களுக்கும் நமது எம்ஜிஆருக்கும் தொடர்பு இல்லை என்கிறார் அமைச்சர். அப்படியானால், இப்போ அந்த நாளிதழ் யார் கட்டுப்பாட்டில் உள்ளது, அதிமுகவுக்கும் நமது எம்ஜிஆருக்கும் தொடர்பு என்னவானது என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. நல்ல வேளை நாளேட்டிற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியவர் எம்ஜிஆருக்கும் அதிமுகவிற்குமே தொடர்பு இல்லை என்று சொல்லாமல் விட்டாரே என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.