காலா பட வெற்றியால் மட்டுமே ரஜினி தலைவராகி விட முடியாது- ஜெயக்குமார்
காலா பட வெற்றியால் மட்டுமே ரஜினிகாந்த் தலைவராகிவிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை: காலா படத்தின் வெற்றியால் மட்டுமே ரஜினிகாந்த் தலைவராகிவிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு வந்த முதல் படம் காலா. கடந்த வியாழக்கிழமை வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்த உலகமே ஒரு நாடக மேடை. பொம்மைகளாகிய நாம் அனைவரும் வெறும் பொம்மையாக இருக்கக் கூடாது.
கடல் தூய்மை
சமுதாயத்திற்கு படைப்பாளியாக இருக்க வேண்டும். கடல் தூய்மை குறித்து மக்கள் மனதில் மாற்றம் தேவை. அனைத்து துறைமுகங்களிலும் சுத்தமாக இருப்பது குறித்து போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
தலைவராக முடியாது
கடலில் பிளாஸ்டிக் கலக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காலா படத்தின் வெற்றி மட்டுமே ரஜினியின் அரசியலை தீர்மானிக்காது. அந்த படத்தின் வெற்றியால் மட்டும் அவர் தலைவராகி விட முடியாது. அதை ஏற்கவும் முடியாது.
கொள்கை இருக்கனும்
படம் வெற்றி பெறுவது படத்தின் கதை, நடிப்பை வைத்து மட்டுமே மக்களும், ரசிகர்களும் தீர்மானிப்பர். எனவே படத்துக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியலில் தலைவராக வேண்டும் என்றால் கொள்கை இருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்திருக்க வேண்டும்.
பொறுப்புடன் இருங்கள்
எம்ஜிஆர் மக்களுடன் ஒன்றியிருந்ததால் அரியணை ஏறினார். எம்ஜிஆரை மக்கள் சினிமாவை வைத்துதான் ஏற்றுக் கொண்டனர் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறும் கருத்தை ஏற்க முடியாது. அவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஏதோ தெருவில் செல்பவர் போல் பேசக் கூடாது என்றார் ஜெயக்குமார்.