கண்ட இடங்களில் எல்லாம் போராட கூடாது.. அமைச்சர் ஜெயக்குமார்
கண்ட இடங்களில் போராடக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போராடலாம், ஆனால் கண்ட இடங்களில் போராடக் கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
வ.உ.சிதம்பரனாரின் 147வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை துறைமுக வளாகத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மரியாதை செலுத்தி ஆசிரியர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. பண்புகள், நல்ல நெறிமுறைகளை சொல்லிக்கொடுத்து நல்ல மனிதர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.
ஜனநாயக நாட்டில் கருத்து கூற அனைவருக்கும் உரிமையுண்டு. அதற்காக கண்ட இடங்களில் எல்லாம் போராடக் கூடாது. தமிழிசை சவுந்தரராஜனுக்காக இந்த கருத்தை கூறவில்லை. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்காகவும் தான் கூறுகிறேன். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிமுக.,வின் கோரிக்கையாகும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.