உதயநிதி என்னங்க.... எந்த "நிதி" வந்தாலும் சமாளிப்போம்... அமைச்சர் ஜெயக்குமார்
அரசியலுக்கு உதயநிதி என்ன எந்த நிதி வந்தாலும் சமாளிப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: அரசியலுக்கு உதயநிதி உள்பட எந்த நிதி வந்தாலும் அதை சமாளிக்கும் தெம்பு, திராணி, ஆற்றல், தைரியம் எங்களுக்கு இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தி.நகரில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதா மரணம் குறித்து பொன்னையன் கூறிய கருத்துகள் விசாரணை கமிஷனுக்குட்பட்டது. விசாரணை ஆணையத்தில் அவர் தனது கருத்துகளை தெரிவிக்க வேண்டும். கனத்த இதயத்துடன்தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அரசு சிறப்பாக வழி நடத்தப்படுகிறது. பட்ஜெட்டுக்கு ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றார்கள் ஆனால் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுமா என்றார்கள் அதுவும் நடைபெற்றது.
ஆளுநர் உரை நடக்காது என்றார்க்ள் அதுவும் நடந்துவிட்டதே. எங்கள் ஆட்சி 100 ஆண்டுகாலம் இருக்கும். அடுத்த அடுத்த 2021-ஆம் ஆண்டிலும் நாங்கள்தான் பட்ஜெட் தாக்கல் செய்வோம். அரசியல் என்பது சமுத்திரம் போன்றது. யார் வேண்டுமானாலும் குதிக்கலாம். ஆனால் கரை சேர்வார்களா என்பது தான் முக்கியம். இதில் கரை சேர்ந்த இயக்கம் என்று பார்த்தீர்களேயானால் அது அதிமுக மட்டும்தான்.
மக்கள் எங்கள் பக்கம் இருக்கும் போது யார் கட்சியை ஆரம்பித்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எந்த நிதியாக இருந்தாலும் சரி அதை நாங்கள் சமாளிப்போம். அதற்கான திராணி, தெம்பு, தைரியம் இருக்கிறது என்றார் அவர்.
ரஜினி, கமல் வரிசையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் அரசியலுக்கு வர போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.