1.10 லட்சம் பேருக்கு தேர்வு மையம் ஒதுக்கியபோது 5 ஆயிரம் பேருக்கு ஒதுக்க முடியாதா என்ன?- ஜெயக்குமார்
1.10 லட்சம் பேருக்கு தேர்வு மையம் ஒதுக்கிய போது 5 ஆயிரம் பேருக்கு ஒதுக்க முடியாதா என்ன என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் மொத்தம் 1.15 லட்சம் பேரில் 1.10 லட்சம் பேருக்கு தேர்வு மையம் ஒதுக்கிய எங்களால் மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு ஒதுக்க முடியாதா என்ன என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வு குளறுபடிகள், வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு ஆகியவை குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கும் சிபிஎஸ்இ வாரியத்துக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையத்தை ஒதுக்க வேண்டும் என சிபிஎஸ்இ கேட்டிருந்தால் செய்திருப்போம்.
நீட் தேர்வை குளறுபடி இல்லாமல் நடத்த வேண்டியது சிபிஎஸ்இயின் பொறுப்பு ஆகும். மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரம் பேரில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தமிழகத்தில் நீட் எழுதினர்,
மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு தேர்வு மையம் அமைக்க எங்களால் முடியாதா என்ன. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அவருக்கு சொந்தமான கல்லூரி வளாகத்தில் நீட் தேர்வு மையம் அமைத்து கொள்ளுங்கள் என்று சிபிஎஸ்இக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதற்கும் பதில் வரவில்லை.
5 ஆயிரம் மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கி தாருங்கள் என சிபிஎஸ்இ கேட்டிருந்தால் நாங்கள் உதவி செய்ய தயாராக இருந்தோம். ஆனால் கேட்கவில்லை. எனவே தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸுக்கு சிபிஎஸ்இ பதிலளிக்கட்டும். சிபிஎஸ்இ ஆணையத்துக்கு உதவி செய்ய அரசும், தம்பிதுரையும் முன்வந்த போதிலும் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தாங்களாகவே செய்ததுதான் இந்த குளறுபடிக்குக் காரணம். இனஇ வரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறாது என்றார்.