திமுகவும் தினகரனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்...அதான் தீர்ப்பை பாராட்டுறாரு... ஜெயக்குமார் நக்கல்
திமுகவும் தினகரனும் ஊழலில் திளைத்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுகவும் தினகரனும் ஊழலில் திளைத்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், அதனால் இந்த தீர்ப்பை அவர் பாராட்டவே செய்வார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது ரூ. 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் தீர்ப்பை கடந்த 7 ஆண்டுகளாக நாடே எதிர்பார்த்து காத்திருந்து தற்போது புஸ்ஸென ஆகிவிட்டது.
இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி , இந்த வழக்கிலிருந்து 14 பேரையும் விடுவித்தார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறுகையில், 2ஜி தீர்ப்பு இறுதியான தீர்ப்பு அல்ல. 2ஜி தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது, இது இறுதி தீர்ப்பல்ல. மேல்முறையீடு செய்ய அனைத்து தகுதிகளும் இந்த வழக்குக்கு உள்ளது.
மேல்முறையீடு செய்யும் போது நல்ல தீர்ப்பு வர வாய்ப்புள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
திமுகவும் தினகரனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்- அதனால் அவர் தீர்ப்பை பாராட்டுவார் என்றார் ஜெயக்குமார்.