H2O என்றால் என்ன?... மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய "வாவ்" வாத்தியார் ஜெயக்குமார்!
சென்னை ராயபுரம் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பாடம் நடத்தி மாணர்களை கலகலப்பாக்கினார்.
சென்னை : சென்னை ராயபுரம் மாநகராட்சி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர், மாணவர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாடம் நடத்தியுள்ளார்.
சென்னை மூலக்கொத்தளம் அருகில் உள்ள மாநகராட்சி 5 மண்டல அலுவலகத்தின் கட்டிடத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று திறந்து வைத்தார். அப்போது மாணவர்களுக்காக கட்டப்பட்ட புதிய வகுப்பறையையும் அவர் திறந்து வைத்தார்.
பின்னர் ஒரு வகுப்பில் இருந்து மாணவர்கள் அந்த புதிய கட்டிடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். வரிசையில் நிற்கப்பட்டிருந்த மாணவர்களுக்கு அமைச்சர் பாடம் நடத்தினார். H2O என்றால் என்ன என்று கேள்வி கேட்டதோடு, கரும்பலகையில் அதனை எழுதிப் போட்டு அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார்.
இதே போன்று நல்லவனாக இரு நல்லதே செய் என்று ஆங்கிலத்தில் Be good, do good என்று எழுதிப்போட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதான் சின்னதாக ஒரு மழை பெய்தாலே சென்னை சாலைகளில் "h2o" மிதக்கிறதே.. இதற்குப் பிறகுமா அவர்களுக்கு அதன் அர்த்தம் புரியாமல் இருக்கும்!.