தொட்டாலே சுடும் முட்டை விலை... சத்துணவில் நிறுத்தமா?... அரசு பதில்!
சத்துணவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை நிறுத்தப்பட மாட்டாது என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
தூத்துக்குடி : பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவில் தொடர்ந்து முட்டை வழங்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதியளித்துள்ளார்.
கடந்த வாரத்தில் ஏறிய முட்டையின் விலை நடுத்தர குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மொத்த கொள்முதல் விலையிலேயே முட்டை விலை 5 ரூபாயை தொட்ட நிலையில், சில்லரை விற்பனைக் கடைகளில் முட்டையின் விலை 5 ரூபாய் 30 காசுகள் முதல் 6 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
முட்டை விலை உயர்ந்ததையடுத்து சத்துணவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டையும் நிறுத்தப்படுமா என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது : முட்டை விலை உயர்வு காரணமாக சத்துணவில் முட்டை நிறுத்தப்படாது. தங்குதடையின்றி அவை தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தூத்துக்குடியிலும் நடைபெற உள்ளது. வஉசி, பாரதி உள்ளிட்ட பிறந்த ஊர் இந்த ஊர். இந்த மாவட்டத்தை கடந்த 1985ல் எம்ஜிஆர் தான் உருவாக்கினார். இதை தொடர்ந்து எட்டயபுரத்தில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தினார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய முக்கிய தலைவர்களுக்கு இந்த மாவட்டத்தில் முக்கிய பங்கு உண்டு. இங்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்துவதில் பெருமைப்படுகிறோம்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். விழாவில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை முதல்வர் எடப்பாடி திறந்து வைப்பார். இதையொட்டி பல்வேறு துறை சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
மேலும் 50க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதோடு முடிந்த திட்டங்களையும் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் சுமார் 5 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.