ராகுல் காந்தி கூறியதை ஏற்று, 7 தமிழர்களை விடுதலை செய்யலாம்.. கடம்பூர் ராஜூ சொல்கிறார்
ராஜிவ் கொலை வழக்கில் ராகுல் காந்தி கூறியதை ஏற்று 7 பேரை விடுவிக்கலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்துவரும் பேரறிவாளன் விவகாரத்தில் ராகுல் காந்தி கூறியதை ஏற்று, மத்திய அரசு அவரை விடுவிக்கலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கபாலி, காலா உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் உதவ வேண்டும் எனக் கேட்டதாகக் தெரிவித்திருந்தார்.
மேலும், ராகுல் காந்தி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்ததாக ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்துவருகின்றனர். திரைப்படத்தில் தலித் அரசியலை பேசிவரும் பா.ரஞ்சித் பேரறிவாளன் விவகாரம் குறித்து ராகுல் காந்தியிடம் பேசியது சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித்திடம் ராகுல் காந்தி கூறியது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டப்போது, அவர் கூறியதாவது: பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பதில் ராகுல் காந்திக்கு ஆட்சேபம் இல்லை என்று கூறியது அவரது குடும்ப முடிவு. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி கூறியதை மத்திய அரசு ஏற்றால் 7 பேரை விடுதலை செய்யலாம். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று கூறினார்.