அமைச்சர் காமராஜ் மீதா 420 போட்டீங்க.. நன்னிலத்திலிருந்து தேனிக்கு தூக்கி அடிக்கப்பட்ட டிஎஸ்பி!
தமிழக அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்த நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம் தேனி மாவட்டத்துக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழக அமைச்சர் காமராஜ் மீது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மோசடி வழக்கு பதிவு செய்த நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம் தேனிக்கு தூகியடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியைச் சேர்ந்த குமார் என்பவரிடம் ரூ30 லட்சம் மோசடி செய்தார் அமைச்சர் காமராஜ் என்பது வழக்கு. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மெத்தனம்
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் தமிழக போலீசார் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யவில்லை.
கடும் கண்டனம்
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் சிபிஐக்கு மாற்றுவேன் என எச்சரித்தார். இதையடுத்து நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம், அமைச்சர் காமராஜ் மீது இபிகோ 420 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார்.
தூக்கியடிப்பு
உச்சநீதிமன்றத்தில் இதை தமிழக அரசு பிரமாணப் பத்திரமாகவும் தாக்கல் செய்தது. இந்த நிலையில் நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம் தேனி மாவட்டத்துக்கு சமூக நீதி மனித உரிமை டிஎஸ்பியாக தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
என்னவாகும் வழக்கு?
மன்னார்குடி டிஎஸ்பி பணியிடம் ஒரு மாத காலமாக காலியாக இருந்து வருகிறது. அதனால் நன்னிலம் டிஎஸ்பி விசாரித்து வந்தார். தற்போது நன்னிலம் டிஎஸ்பியும் தூக்கியடிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் காமராஜ் மீதான வழக்கு என்னவாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.