ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள்- தமிழக அரசு அறிவிப்பு
ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருவாரூர்: மார்ச் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளான தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டுகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கி வருகிறது.
மையங்கள் மூலமாகவும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் காமராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரேஷனில் பொருட்கள் பெற மார்ச் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என அவர் கூறியுள்ளார். பெரும்பாலானோருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
ஸ்மார்ட் கார்டு இல்லாதோரும் ரேஷன் பொருட்களை பெறலாமா என்ற கேள்விக்கு அதுகுறித்து இப்போதே கூறமுடியாது. நெருக்கத்தில்தான் முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. திருவாரூரில் நடைபெற்ற முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கிவிட்டு அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம். பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றார்.