ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று பணிக்குத் திரும்ப வேண்டும்... எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்!
ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று பேருந்துகளை இயக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று பேருந்துகளை இயக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மக்களுக்கும், அரசுக்கும் சிரமம் ஏற்படுத்தாமல் ஊழியர்கள் அமைதியான முறையில் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக சுமார் 40 தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 6 மணி நேரமாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஊதிய பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியதாவது : போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தை சுமார் 12 சுற்றுகளைக் கடந்து நடந்துள்ளது. 2.57 காரணி ஊதிய உயர்வு வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கேட்டனர். அரசு நிதித்துறையிடம் அனுமதி பெற்று 2.44 காரணி ஊதிய உயர்வு தர ஒப்புக் கொண்டுள்ளது.
வித்தியாசம் களையப்படும்
அரசு ஊழியர்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஊதிய வித்தியாசம் உள்ளதாகச் சொன்னார்கள். சில தருணங்களில் போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய விகிதம் அதிகமாக இருக்கும். குறைந்தபட்சம் 2,600 முதல் அதிகபட்சமாக 11 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.
ஊதிய உயர்வு அதிகரிப்பு
சென்ற ஒப்பந்தத்தை விட தற்போது அதிகப்படியான ஊதியம் தான் வழங்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட வேண்டும் என்று கேட்டுக கொண்டனர். அதை 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர். அதையும் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
32 தொழிற்சங்கள் ஒப்புக் கொண்டுள்ளன
புதிய ஊதிய ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ. 83 கோடி செலவாகும். ஊதிய ஒப்பந்தத்தை 32 தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. 10 தொழிற்சங்கங்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றன, மக்களுக்கும் அரசுக்கும் சிரமம் ஏற்படுத்தாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அமைதியான முறையில் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
காலையில் என்னவாகும்?
பேருந்து போக்குவரத்து மாலை முதலே ஸ்தம்பித்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குத் திரும்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் காத்திருந்த மக்கள் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதே நிலை நீடீத்தால் காலை பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் நிலைமை மிகவும் சிரமமாகிவிடும் என்பது மட்டும் நிதர்சனம்.