பஞ்சாயத்த முடிச்சாச்சி.. எச்.ராஜாவை கைது செய்ய தேவையில்லை.. அமைச்சர் பாண்டியராஜன் பரபரப்பு பேட்டி
பஞ்சாயத்த முடிச்சாச்சி.. எச்.ராஜாவை கைது செய்ய தேவையில்லை.. அமைச்சர் பாண்டியராஜன் பரபரப்பு பேட்டி
சென்னை: எச்.ராஜாவை கைது செய்ய தேவையில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஹைகோர்ட் மற்றும் காவல்துறை குறித்து தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியவர் ராஜா.
இவ்வாறு ஜனநாயகத்தின் முக்கியமான இரு தூண்கள் குறித்து தரக்குறைவாக பேசி அவற்றின் மாண்பை ராஜா குலைத்துவிட்ட நிலையிலும், அமைச்சர் ஒருவர் இவ்வாறு பேட்டியளித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிய, மாஃபா பாண்டியராஜன் மேலும் கூறியதை பாருங்கள்:
சோபியா செய்தது தவறு
விமானத்தில் வைத்து கத்தி கோஷம் போட்டது மிகப்பெரிய தவறு. எனவேதான் சோபியா கைது செய்யப்பட்டார். ஆனால், அதை ஒப்பிடும்போது, எச்.ராஜா பேச்சோ, முன்பு எஸ்.வி.சேகர் கூறிய கருத்தோ, சட்டம் ஒழுங்கில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மோசமானது கிடையாது.
ராஜா ஃப்ரீ
எனவே எச்.ராஜாவை கைது செய்யும் நிலை ஏற்படவில்லை. இவ்வாறு மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். இதன் மூலம், காவல்துறை வழக்குப் பதிவு செய்தும்கூட எச்.ராஜாவை கைது செய்வதில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. எனவே எச்.ராஜா இனி ஃப்ரீ பேர்ட்தான் என்பது உறுதி.
நேற்று அப்படி
ஆனால் ஆவடியில் நேற்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், எச். ராஜா மீது போடப்பட்ட வழக்குக்கு ஏற்றார்போல் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இருப்பினும் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
நாங்கல்லாம் பயப்பட மாட்டோம்
அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியிலும், எச்.ராஜாவை கைது செய்வோம் என கூறவில்லை. அவர் அளித்த பேட்டியில், "அதிமுக பயப்படவில்லை. எதை பார்த்தும் பயப்படும் இயக்கம் கிடையாது. அது ஊடகங்கள் கற்பனை. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதை அரசு எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்" இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார்.