பெரியபாண்டி குடும்பத்துக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆறுதல்
ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியபாண்டியின் குடும்பத்தினரை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற இடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியின் குடும்பத்தினரை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 16-ஆம் தேதி கொள்ளையர்கள் சிலர் மூன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டுச் சென்றனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் மறைந்திருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீஸார் பாலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றனர்.
இன்று அதிகாலை அவர்களை பிடிக்க முயன்ற போது அங்கு மறைந்திருந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மதுரவாயல் காவல் துறை ஆய்வாளர் பெரியபாண்டி வீரமரணம் அடைந்தார்.
மேலும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆவடியில் உள்ள பெரியபாண்டியின் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆறுதல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் வீரமரணம் அடைந்த பெரியபாண்டியின் உடலை மதுரைக்கு அழைத்த வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களின் குடும்பத்தினருக்கு செய்ய வேண்டிய உதவிகளை தமிழக அரசு செய்யும் என்றார் அவர்.