'மக்களின் ஆளுநர்' பன்வாரிலால் புரோஹித்.. அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மக்களின் ஆளுநர் என புகழ்ந்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தஞ்சை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மக்களின் ஆளுநர் என புகழ்ந்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை, கடலூர், தஞ்சை என பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மாநில சுயாட்சி உரிமையில் மத்திய அரசு ஆளுநர் மூலம் தலையிடுவதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் ஆய்வு மேற்கொள்ளும் இடங்களில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கறுப்புக்கொடி காட்டி வருகின்றன.
தஞ்சை தமிழ் பல்கலை.
இந்நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார்.
மக்கள் ஆளுநர்
அப்போது ஆரஞ்சு விளையும் நாக்பூரிலிருந்து தஞ்சைக்கு வந்துள்ள மக்கள் ஆளுநர் அவர்களே என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் புகழ்ந்தார். ஆளுநர் தமிழக அரசின் உரிமைகளில் தலையிடுவதாகப் புகார் எழுந்திருக்கும் நிலையில் ஆளுநரை 'மக்களின் ஆளுநர்' எனப் புகழ்ந்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்போதும் புகழ்ந்த அமைச்சர்
முன்னதாக தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் சலங்கை நாதம் நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி தொடங்கி ஜனவரி 1-ம் தேதி நிறைவடைந்தது. அப்போதும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆளுநர் பன்வாரிலாலை மக்களின் ஆளுநர் என புகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தது.
காவிரி உரிமை மீட்புக்குழு
ஆளுநரின் ஆய்வை கண்டித்து தஞ்சையில் திமுகவினர் இன்று கறுப்பு கொடி போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்த காவிரியில் தண்ணீர் பெற்றுத்தரக்கோரி தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக காவிரி உரிமை மீட்புக்குழு கருப்புக்கொடி போராட்டம் நடத்தியது.