சிறுதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக ரூ.1லட்சம் கடன்: வங்கிகளுக்கு தமிழக அரசு கோரிக்கை
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பாதிப்பை சரிசெய்ய உடனடி கடனாக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க வேண்டுமென வங்கிகளை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னையில் உள்ள கிண்டி சிட்கோ அலுவலகத்தில் ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நல அமைச்சர் ப.மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சிட்கோ அலுவலகத்தில் மழை நீரால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு சீரமைப்புப் பணிகளுக்காக 5 லட்ச ரூபாயை கடனாக வங்கிகள் தர வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான தவணைகளை செலுத்த 6 மாத காலமும், தற்போது கோரியுள்ள 5 லட்ச ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த 4 ஆண்டும் அவகாசம் தர வேண்டும் என சிறுதொழில் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் மோகன், சிறுதொழில் துறையினர் வெள்ள பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டு உற்பத்தியைத் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
முதல்கட்டமாக, பாதிப்புகளை சரிசெய்ய ஒரு லட்ச ரூபாயை கடனாக வழங்க முன்வர வேண்டும் என வங்கிகளை அமைச்சர் மோகன் கேட்டுக் கொண்டார். எல்லா நிறுவனங்களையும் ஒரே மாதிரியாகக் கருதாமல், அவற்றின் பாதிப்பு மற்றும் அளவை வங்கிகள் கருத்தில் கொண்டு உதவி செய்ய வேண்டும் என்றும் மோகன் வலியுறுத்தினார்.
காப்பீடுகள் மீதான இழப்பீடு கோரிக்கைகளை ஐஆர்டிஏ பரிந்துரைகளின் படி விரைந்து பரிசீலித்து முடிவெடுக்க இருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் உறுதி தெரிவித்தன.