சூரசம்ஹார விழாவில், டிஎஸ்பியுடன் மோதிய ஓபிஎஸ் தம்பி.. பொதுமக்களுடனும் கைகலப்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற, சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, போலீஸ் டி.எஸ்.பியுடன் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் மற்றும் தம்பி பெரும் தகராறில் ஈடுபட்டு மோசமாக நடந்துகொண்டதாகவும், அதிருப்தியடைந்த பொதுமக்கள், அமைச்சரின் உறவினர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில், கந்த சஷ்டி விழாவும், அதன் நிறைவாக கடந்த செவ்வாய்க்கிழமை சூரசம்ஹாரமும் வெகு விமரிசையாக நடந்தன. சுமார் 10 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹாரத்தை நேரில் பார்த்து தரிசித்தனர்.
இதற்கு நடுவே, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவுக்காரர்களுக்கும், போலீஸ் டி.எஸ்.பிக்கும் நடுவே, ஒரு பெரும் ரகளை நடந்தேறியுள்ளது அம்பலமாகியுள்ளது.
ஓபிஎஸ் உறவினர்
இதுகுறித்து ரகளையை பார்த்த சிலர் கூறியதாவது: சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அப்போது நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பிரதீப் மற்றும் தம்பி ராஜா மற்றும் உறவினர்கள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர்.
டிஎஸ்பியுடன் மோதல்
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தூத்துக்குடி மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவு டிஎஸ்பி கோவிந்தராஜ், அவர்களை தடுத்தார். "வி.வி.ஐ.பி. பாஸ் வைத்திருப்பவர்களுக்கு தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்துதான் சூரசம்ஹாரத்தை காண வேண்டும்" என்று டிஎஸ்பி கூறியுள்ளார்.
ஆனாலும் போலீஸாரும், பத்திரிகையாளர்களும் நின்ற அந்த அந்த வட்ட வடிவ பகுதிக்குள்தான் தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கறாராக கூறினர். "எங்களை உள்ளே விடமாட்டேன் என்று கூறுகிறாயே, நான் யார் தெரியுமா..?" என்று ஓ.பி.எஸ்சின் தம்பி ராஜா, மிரட்டும்வகையில், சவுண்ட் விட்டார்.
கூட்டம்
ஓ.பி.எஸ் உறவினர் என்று தெரிந்ததும், தயங்கிய டிஎஸ்பி கோவிந்தராஜ், சரி உள்ளே வாருங்கள் என்று அழைத்தார். ஆனால் ஓபிஎஸ் மகன் மற்றும் தம்பி மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஆண், பெண் என மொத்தம், 30க்கும் மேற்பட்டோர் கூட்டமாக நுழைந்தனர். இதனால் கலவரமடைந்த டிஎஸ்பி, இத்தனை பேர் வந்தால், கூட்டநெரிசல் ஏற்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறினார்.
போன் பறந்தது
ஆனால் எதிர்ப்பையும் மீறி அத்துமீறி உள்ளே நுழைந்த அவர்கள் தரையில் அமர்ந்தனர். பின்னர் இது தொடர்பாக ஓ.ராஜா, தென் மண்டல ஐஜி முருகன், நெல்லை சரக டிஐஜி அன்பு ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு டிஎஸ்பி பற்றி புகார் செய்தார். உயர் அதிகாரிகளும் உடனே அந்த இடத்திற்கு ஓடி வந்து ஆஜராகியுள்ளனர்.
மக்களோடு கைகலப்பு
இதையடுத்து டிஎஸ்பிக்கு, மேலிடத்தில் இருந்து டோஸ் விழுந்ததாக கூறப்படுகிறது. எனவே, "தப்பா பேசியிருந்தால் மன்னித்துவிடுங்கள்" என்று ராஜாவிடம் சென்று நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் டிஎஸ்பி கோவிந்தராஜ். அப்போது அவர், டிஎஸ்பியை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதை கவனித்த பக்தர்கள் கோபமடைந்து, ஓபிஎஸ் உறவுக்காரர்களுக்கு எதிராக தகராறு செய்துள்ளனர். பொதுமக்களுக்கும், ஓபிஎஸ் உறவினர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மறுக்கும் காவல்துறை
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வருவதை உணர்ந்த, போலீசார், அங்கு பொருத்தியிருந்த ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளை தற்போது நீக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி எஸ்.பி அஸ்வின் கோட்னீஸிடம் கேட்ட போது, டிஎஸ்பி என்னிடம் எந்த புகாரும் கூறவில்லை என்றார்.
ஆணவம் அழியும் இடம்
கோவிந்தராஜ் கூறுகையில் ‘‘வி.ஐ.பி-க்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்குப் போங்க என்று அவர்களிடம் கூறினேன். இங்கேதான் வசதியாக இருக்கும் என்று கூறினர். எனவே, நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். வேறு எதுவும் அங்கு நடக்கவில்லை" என்று தெரிவித்தார். ஆணவத்தின் வடிவமான சூரனை முருகப்பெருமான் அழிக்கும், காட்சியே சூரசம்ஹாரம். அந்த சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் வைத்து, அதிகார ஆணவத்தில் யார் நடந்துகொண்டாலும், உரிய பலன் கைமேல் கிடைக்கும் என்கின்றனர், திருச்செந்தூர் வட்டார மக்கள்.