ஆமா ஓபிஎஸ் அரசியல்வாதிதானே... எப்ப ஜோசியரானாரு? அமைச்சர் ஓ.எஸ். மணியன் 'லந்து'
ஒ.பன்னீர்செல்வம் அரசியல்வாதி என்றே நினைத்த நிலையில் அவர் எப்போது ஜோசியரானார் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : பொதுத் தேர்தல் முன்கூட்டியே வரும் என ஆருடம் சொல்லும் ஓ.பன்னீர்செல்வத்தை இது வரை அரசியல்வாதி என்றே நினைத்தோம் அவர் எப்போது ஜோசியரானார் என அமைச்சர் மணியன் கிண்டலடித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகள் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்பது போல அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் இன்று காலையில் தெரிவித்திருந்தார். இரண்டு அணிகள் இணையுமா என்ற கேள்விகளை மக்கள் இனி கேட்க மாட்டார்கள் என்று மைத்ரேயன் கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஜெயலலிதாவால் நியமிக்கப்ப 2 மாவட்ட செயலாளர்கள் தவிர அனைத்த மாவட்ட செயலாளர்களும் எடப்பாடி அணியுடனேயே உள்ளதாகக் கூறினார். இதே போன்று 95 சதவீத நிர்வாகிகளின் ஆதரவு தங்கள் அணிக்கே இருப்பதால் ஆட்சி கவிழும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
முதல்வர் பழனிச்சாமி அரசை சிறப்பாக வழிநடத்திச் செல்வதாகவும், அரசின் எந்த கோப்பும் நிலுவையில் இல்லாதபடி ஆயிரத்து 560க்கும் மேற்பட்ட கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சசிகலாவை ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது தங்கள் அணி இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னரே பொதுத் தேர்தல் வரும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மணியன், இது வரை ஓ.பன்னீர்செல்வத்தை அரசியல்வாதி என்றே நினைத்ததாகவும், அவர் எப்போது ஆரூடம் சொல்லும் ஜோசியராக மாறினார் என்றும் கேலி செய்தார். ஓ.பன்னீர்செல்வம் கூறுவது போல பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பே இல்லை என்றும் எந்த தடையுமின்றி அதிமுக அரசு எஞ்சிய 4 ஆண்டு கால ஆட்சியை சிறப்பாக ஆற்றும் என்றும் அவர் கூறினார்.