கொறடா உத்தரவை மீறினால் தகுதியிழப்பு... எம்எல்ஏக்களுக்கு ஓ.எஸ். மணியன் மிரட்டல்
கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களிக்கும் எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்படுவார்கள் அமைச்சர் ஓஎஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களிக்கும் எம்எல்ஏக்கள் தகுதியை இழக்க நேரிடும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மிரட்டல் விடுத்துள்ளார். சட்டசபையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சசிகலா தரப்பின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என அதிமுகவின் கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் ஆணையிட்டுள்ளார். இந்நிலையில் இன்று கூவத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி தலைமையிலான அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
மேலும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்களை சட்டப்படி சபாநாயகர் தகுதியிழப்பு செய்வார் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மிரட்டல் விடுத்துள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்துள்ள நிலையில் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் நாளையே சசிகலா தரப்பு அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவது குறிப்பிடத்தக்கது.