எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக பண வசூல்...அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கைது !
தூத்துக்குடி: சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் சீட் வாங்கித் தருவதாக கூறி பண வசூல் செய்ததாக சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் மூர்த்தியை தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்றும், எத்தனை லட்சம் செலவழித்தாவது எம்.எல்.ஏ வேட்பாளராகிவிட வேண்டும் என்றும் அதிமுகவினர் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டபிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாக பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே சண்முகநாதன் மகன் ராஜா மீதும் இதே புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் கண்காணித்து வந்த நிலையில், அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் விஜயநாராயணம் கிருஷ்ணமூர்த்தியை தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே புதூர் பாண்டியாபுரம் கிருபானந்த முருகன் என்பவரின் மனைவி தாஜூ நிஷா, அமைச்சர் சண்முகநாதனின் டூவிபுரம் வீட்டில் அமைச்சரின் உதவியாளர் மூர்த்தியிடம் ஆய்வக உதவியாளர் பதவிக்கு ரூ. 3 லட்சம் கொடுத்தாகவும் ஆனால் மூர்த்தி வேலை வாங்கித் தரவில்லை, பணத்தை திருப்பிக் கேட்டதற்கு முருகனின் ஜாதி பெயரை கூறி திட்டியதாக புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் முதல் கட்டமாக 420, 294பி,560(1) பிசிஆர் ஆகிய குற்றப்பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர். எண்259/16) போடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூர்த்தி, முருகனிடம் வாங்கிய பணத்தை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உதவியாளரிடம் கொடுத்தாக வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. ஓ.பி.எஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து மூர்த்தி வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் மீது வழக்கு போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மூர்த்தி வாக்குமூலத்தில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அமைச்சர் ஒ.பன்னிர்செல்வம், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனை படிதான் கட்சி பதவியிலிருந்து, டெண்டர் வரை எல்லாமே முடிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகள் அனைவரும் இரு அமைச்சர்களின் ஆலோசனையின் படிதான் செயல்பட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
உதவியாளர் மூர்த்தி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் இருவரும் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவும் போயஸ்கார்டனிலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் விரைவில் இருவரும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படலாம்.என தகவல்கள் தெரிவிக்கின்றன.