மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் அமைச்சர் பாண்டியராஜன் சந்திப்பு.. விரைவில் ஓபிஎஸ் பக்கமா?
அதிமுக மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜை இன்று ஓபிஎஸ் ஆதரவு அமைச்சர் பாண்டியராஜன் நேரில் சென்று சந்தித்தார்.
சென்னை: தொடர்ந்து, எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வரும்நிலையில், இன்று கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிமுகவைச் மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜை நேரில் சந்தித்தார்.
முதல்வர் ஓபிஎஸ், "கட்டாயப்படுத்தப்பட்டேன்" என்று சொன்ன பிறகு அதிமுகவின் முக்கிய புள்ளிகள் அவரை திட்டித் தீர்த்தன. அதிமுகவினர் துரோகி என்றனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஓபிஎஸ்ஸுக்கு உள்ள ஆதரவு அதிகரித்ததைப் பார்த்து "சந்தர்ப்பவாதி ஓபிஎஸ்" என்று சொன்ன மாஃபா பாண்டியராஜன் நேற்று அதே ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள அதிமுக எம்எல்ஏ நட்ராஜை மாஃபா பாண்டியராஜன் சந்தித்தார். முகநூலில் தனது அலுவலகத்திற்கு வந்து மக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என நட்ராஜ் பதிவிட்டிருந்தார். மக்கள் தான் என்னை தேர்ந்தெடுத்தார்கள் மக்களுக்காக நான் உழைப்பேன் என்றும் நட்ராஜ் கூறியிருந்தார். இதனையடுத்து, அலுவலகத்திற்கு சென்று பாண்டியராஜன் நட்ராஜை சந்தித்து பேசினார்.
முன்னதாக, முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரிக்க வேண்டும் என்று முழக்கமிட்டு சி.பி. ராமசாமி சாலையில் உள்ள மயிலாப்புர் எம்எல்ஏ நடராஜ் அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்எல்ஏ நட்ராஜ் தான் எந்த அணியிலும் இல்லை என்று நேற்று சொல்லி இருந்த நிலையில், மாஃ.பா பாண்டியராஜனை இன்று சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விரைவில் நட்ராஜ் ஓபிஎஸ்ஸை சந்திக்கலாம் என்று மயிலாப்பூர் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.