வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா... பறக்கும் படையிடம் கெஞ்சிய அதிமுக அமைச்சர்!
விராலிமலை: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தபோது கையும் களவுமாக சிக்கிக் கொண்டதோடு, ரகளையும் செய்த அதிமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பறக்கும் படை அதிகாரிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கெஞ்சிய சம்பவம் விராலிமலையில் நடந்துள்ளது.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடந்தூர், விராலிமலை, மணப்பாறை ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகள் வருகின்றது.
கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கும், திமுக வேட்பாளர் சின்னசாமிக்கும் கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் விராலிமலை பகுதியில் தான் தம்பிதுரை சென்ற பகுதிகளில் எல்லாம் கடும் எதிர்ப்பு கிளம்பி மோதல் வெடித்து, மண்டை உடைப்பு சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றது. இதனால், விராலிமலை பகுதியில் அதிமுகவுக்கு பெரும் வாரியான வாக்குகள் கிடைக்காது என அதிமுக தரப்பில் கருதப்பட்டது.
மேலும், விராலிமலை சட்டசபைத் தொகுதியில் உள்ள பகுதிகள் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் கண்ரோலில் வருகின்றது. இதனால், இந்த பகுதியில் குறைந்த வாக்குகள் வாங்கினால், தலைமை கடும் கோபம் அடையும் என கருதியே அந்த பகுதியில் வாக்களார்களை கவர கரண்ஸியை இறக்கிவிட முடிவு செய்யப்பட்டதாம்.
இந்த நிலையில், விராலிமலை சட்டசபை தொகுதி அன்னவாசல் மேட்டுத்தெருவில் அதிமுக பிரமுகர் நிர்வாகி ஒருவர் பண பட்டுவாடா செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பறக்கும்படையினர் கையும் களவுமாக பிடித்தனர். இதில், ஆத்திரமடைந்த அதிமுகவினர் பறக்கும்படையினர் வசம் இருந்த கேமராக்களை அடித்து நொறுக்கினர். மேலும் , அதிகாரிகள் சிதிலரை தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அதிகாரிகளிடம் சமாதான முயற்சி மேற்கொண்டார். மேலும், இனி மேல் இது போல் நடக்காமல் பாதுகாத்துக் கொள்வதாக உறுதி அளித்தார். இதை பறக்கும்படை அதிகாரிகள் தரப்பு ஏற்கவி்ல்லை.
இந்த சம்பவம் குறித்து , மாவட்ட தேர்தல் அலுவலருக்கும், புதுக்கோட்டை எஸ்.பி.க்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.