நடிகை கவுதமி பிரதமருக்கு கடிதம் எழுதியது விளம்பரம்தான் - ஆர்.பி. உதயகுமார்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் அதிமுகவின் பொது செயலாளர் பதவி காலியாகவே, அந்த பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெயர் மட்டுமே அடிபட்டு வருகிறது. சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று கூறி நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே திடீரென சசிகலா முதல்வராக பொறுப்பேற்ற வேண்டும் என்று அமைச்சர்களில் சிலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தநிலையில் ஆர்.கே. நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று சசிகலா முதல்வராக வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளிப்படையாகவே பேட்டியளித்து வருகிறார். இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயகுமார், சசிகலாதான் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று கூறினார்.
ஜெயலிதா மரணம் குறித்து நடிகை கவுதமி பிரதமருக்கு கடிதம் எழுதியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நடிகை கவுதமி பிரதமருக்கு கடிதம் எழுதியது விளம்பரம்தான் என்றார். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை கவுதமி பார்த்ததில்லை. ஒரு கட்சித் தலைவரைப் பற்றி பேசுவது எழுதுவது விளம்பரம்தான் என்றும் கூறியுள்ளார்.