பாலில் ரசாயனம் இல்லாட்டி ரிசைன் பண்ணிடறேன்.. தனியார் நிறுவனங்களுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்!
தனியார் பாலில் ரசாயனம் கலந்திருப்பது நிரூபிக்கவில்லை எனில் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
சிவகாசி: தனியார் பாலில் ரசாயனம் கலந்திருப்பது நிரூபிக்கவில்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
தனியார் பால் நிறுவனங்கள் தயிரையே பாலாக்குகின்றன என்று கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பதால் அதை குழந்தைகளுக்கு கொடுப்பதால் புற்றுநோய் ஏற்படும். தனியார் பால் நிறுவனங்கள் தாங்கள் பாலில் கலப்படம் செய்யவில்லை என நிரூபிக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழக அரசுக்கு வருவாயை ஏற்படுத்த ஆவின் பால் விற்பனையை ஊக்குவிக்க அமைச்சர் இதுபோன்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாக தனியார் பால் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தன.
இந்நிலையில் சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தனியார் பால் நிறுவன மாதிரிகள் மத்திய அரசின் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாலில் ரசாயனம் கலந்திருப்பது உண்மை என்று வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரசாயன பொருட்கள் கலந்த பாலை உபயோகப்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பல்வேறு உடல் நலக்குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. தனியார் பாலில் ரசாயனம் கலந்திருப்பது நிரூபிக்கப்படவில்லை என்றால் எனது பதவியை நான் ராஜினாமா செய்கிறேன் என்று சவால் விடுத்துள்ளார்.