500 ரூபாய்க்காக பேசும் கூலிப் பேச்சாளர் வைகை செல்வன்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 'பட்பட்'
500 ரூபாய் கூலிக்காக பேசும் பேச்சாளர்தான் வைகை செல்வன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக சாடியுள்ளார்.
சிவகாசி: தம்மை பதவி விலகச் சொல்லும் அதிமுக பேச்சாளர் வைகைச் செல்வன் ரூ500 பணத்துக்காக பேசக் கூடியவர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே கடுமையாக விமர்சித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக அமைச்சர்களில் சர்ச்சைக்குரியவர் ராஜேந்திர பாலாஜி. அண்மையில் தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்வதாக பரபரப்பு புகாரைக் கூறினார்.
பின்னர் தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்யவில்லை எனில் தூக்குபோட்டு சாகிறேன் என சவால்விட்டார். ஆனால் இதை நிரூபிக்க அவர் தவறியதால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.
செய்தியாளர் சந்திப்பு
இதனிடையே சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்தார் ராஜேந்திர பாலாஜி. அப்போது உங்களை ராஜினாமா செய்ய சொல்லி இருக்கிறாரே பால்முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி என கேள்வி கேட்கப்பட்டது.
போலி சங்கம்
இதற்கு பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, பொன்னுச்சாமி ஒரு பால் முகவரே அல்ல. அவர் போலி சங்கம் நடத்தி வருகிறார்.
விலைபோனவர்
தனியார் பால் நிறுவனங்களால் விலைக்கு வாங்கப்பட்டவர் பொன்னுசாமி. ஆய்வகங்களுக்குச் சென்று பால் கலப்படச் சோதனையைத் தடுத்து நிறுத்த பார்க்கின்றன தனியார் நிறுவனங்கள். நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
வைகை செல்வன்
அதேபோல அதிமுக பேச்சாளர் வைகைச் செல்வனும் உங்களை ராஜினாமா செய்ய சொல்கிறாரே என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் வைகைச்செல்வன் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் 500 ரூபாய்க்காக பேசுகிற ஒரு கூலிப் பேச்சாளர்தான் அவ்வளவுதான் என பொங்கினார்.