தந்தையை இழந்த எச் ராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து-அமைச்சர் உதயகுமார் உளறலால் சர்ச்சை
தந்தையை இழந்த எச் ராஜாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தந்தையை இழந்த பாஜக தேசிய செயலர் எச் ராஜாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜாவின் தந்தை பேராசிரியர் எஸ்.ஹரிஹரன். சென்னையில் வசித்து வந்த இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு ஆறுதல் சொல்ல அமைச்சர் ஆர்பி உதயக்குமார் சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தந்தையை இழந்து வாடும் எச் ராஜாவின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். இரங்கல் என கூறுவதற்கு பதில் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் வாழ்த்து என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பாடகி சுதா ரகுநாதனை பரதநாட்டிய கலைஞர் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டார். இதேபோல் சுஹாசினி மணிரத்னத்தை சுஹாசினி மணிவாசகம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறிப்பிடத்தக்கது.
மேடையில் அமர்ந்திருப்பவர்கள் யார் என்பது கூட தெரியாமல் அமைச்சர்கள் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.