ஜெ. விரும்பி நியமித்த பெண் அதிகாரியிடமே லஞ்சம் கேட்ட அமைச்சர்.. கடும் கொதிப்பில் அதிமுக தொண்டர்கள்
ஜெயலலிதா நியமித்த அதிகாரியிடம் லஞ்சம் கேட்டுள்ள சம்பவம் உண்மையான அதிமுக தொண்டர்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பெண் அதிகாரியிடமே அமைச்சர் மிரட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர் மீனாட்சி. குழந்தைகள் தொடர்பான சமூக பணிகளில் ஈடுபட்டவர். இதனால் ஈர்க்கப்பட்டார் ஜெயலலிதா. மேலும் மீனாட்சியின் குடும்பம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமான குடும்பம்.
இதையெல்லாம் வைத்து, லஞ்சம் இன்றி, மீனாட்சிக்கு பணி நியமனம் கிடைத்துள்ளது. ஜெயலலிதாவின் தனிப்பட்ட செல்வாக்கால் அவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
"இந்த நிலையில், லஞ்சம் கொடுக்காமல் ஒரு அதிகாரி பணியாற்றுவதா?" என 'அறச்சீற்றம்' அடைந்துள்ளார் அமைச்சர் சரோஜா. புதிதாக ஒரு அதிகாரியை இப்பணியிடத்திற்கு நியமித்தால் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கிடைக்கும். ஒன்று பணத்தை கொடு, அல்லது இடத்தை காலி செய், என சரோஜாவின் கணவர் லோகநாதன் மிரட்டியதாக மீனாட்சி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
எதற்கெடுத்தாலும் இது அம்மா ஆட்சி என உணர்ச்சி பொங்க கூறிக்கொண்டும், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரது காலில் சாஸ்டாங்கமாக விழுந்துகொண்டும் இருந்த அமைச்சர்களில் ஒருவரே, இப்போது, ஜெயலலிதா நியமித்த அதிகாரியிடம் லஞ்சம் கேட்டுள்ள சம்பவம் உண்மையான அதிமுக தொண்டர்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சி எத்தனை நாட்கள் நீடிக்குமோ தெரியாது, அதற்குள்ளாக சுருட்ட வேண்டிய அளவுக்கு, சுருட்டி பணத்தை அள்ளிவிட வேண்டும் என்ற ஒரு ஓட்டம், அரசு மட்டத்தில் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.