மதுசூதனனுக்கு வாக்களித்தால் 'ஸ்கூட்டர்' கிடைக்கும்... அமைச்சரின் விதிமீறல் வாக்குறுதி வீடியோ!
ஆர்கே நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு வாக்களித்தால் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அமைச்சர் சரோஜா வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு வாக்களித்தால் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அமைச்சர் சரோஜா வாக்காளர்களிடம் உறுதிஅளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் ஆர்கே நகர் தொகுதியில் வாக்களர்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி அதிமுகவின் இரும்புக் கோட்டை என்று ஆளும் கட்சியினரால் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. எனினும் இந்த இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு ஒரு சவாலானதாகவே இருக்கிறது.
எப்போதுமே ஆளும்கட்சிக்கு போட்டியாக எதிர்க்கட்சி மட்டுமே இருக்கும் ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுகவில் இருந்து கழட்டிவிடப்பட்டு டிடிவி. தினகரன் அதிமுகவை எதிர்த்து நிற்கிறார். தொகுதியிலும் அவருக்கு செல்வாக்கு இருப்பதாகவே உளவுத்துறை ரிப்போர்ட்டுகளும் கூறுகின்றன.
தினகரனின் தேர்தல் வாக்குறுதி
கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிமுக வேட்பாளராக இருந்த போது தினகரன் வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கை இப்போது வேலை செய்வதாக தெரிகிறது. வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்று தினகரன் அந்த தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தார். இதை முன்வைத்து தான் தற்போது தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக அளிக்கும் உறுதி
இந்நிலையில் அதிமுக சட்டமன்ற தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று வாக்கு சேகரித்து வருகின்றனர் ஆளும் கட்சியினர். தாலிக்குத் தங்கம், பட்டதாரி பெண்களுக்குத் திருமண நிதியுதவிகள் செய்யப்படும் என்று வாக்காளர்களிடம் உறுதியளிக்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் விநியோகம்
ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு முதல்வர் பழனிசாமியால் செயல்படுத்தப்படும் என்று 2017 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை முன் எடுத்து அதிமுக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆர்கே நகர் தொகுதிகளில் ஸ்கூட்டருக்கு மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
வெளியானது அமைச்சர் வீடியோ
இதனிடையே மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் சரோஜா, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிற மாவட்டங்களில் தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. ஆர்கே நகரில் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரியிடம் புகார் தர திட்டம்
அதிமுகவிற்கு வாக்களித்தால் தேர்தலுக்குப் பின்னர் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் சரோஜா வாக்காளர்களுக்கு உறுதியளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. விதிகளை மீறி வாக்காளர்களிடம் அமைச்சர் தேர்தல் வாக்குறுதி அளிப்பதாக டிடிவி. தினகரன் தரப்பினர் பிரச்னை எழுப்பியுள்ளனர். இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார்அளிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.