லஞ்சப்புகார் குற்றச்சாட்டு... அறிக்கை வெளியிடுவாராம் அமைச்சர் சரோஜா
தன் மீதான லஞ்சப்புகார் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவேன் என்று அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.
சென்னை: அதிகாரி ராஜ மீனாட்சி சுமத்தியுள்ள லஞ்சப்புகார் குற்றச்சாட்டு குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவேன் என்று சமூக நலத்துறை அமைச்சர் சரேஜா கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் ராஜமீனாட்சி. இவர் தமிழக சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பணியிட மாறுதலுக்கு ரூ. 20 லட்சம் லஞ்சம் கேட்டார் அமைச்சர் சரோஜா என்பது மீனாட்சியின் புகார். குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் ரூ.30 லட்சம் தரவேண்டும் என்று அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் மிரட்டல் விடுத்தாக நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார்.
கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்றும் எந்த சூழ்நிலையிலும் பணியை விட்டு விலகமாட்டேன் என்றும் மீனாட்சி கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை பற்ற வைத்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து வாய் திறக்காமல் இருந்தார் அமைச்சர் சரோஜா.
அமைச்சர் சரோஜாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் வந்த சரோஜா, தன் மீதான லஞ்ச மற்றும் மிரட்டல் புகாருக்கு விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என்றார்.